ஆட்டோ மீது சொகுசு கார் மோதல்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்
தில்லியில் ஆட்டோ மீது சொகுசு கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
தில்லியில் ஆட்டோ மீது சொகுசு கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தில்லி காவல் துறையினர் புதன்கிழமை கூறியதாவது: தில்லி லடோ சராய் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு சொகுசு கார் வந்து கொண்டிருந்ததது.
அந்த வேளையில், சத்தர்பூரில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு 6 பேர் ஆட்டோவில் மத்திய தில்லி, பல்ஜீத் நகர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். லடோ சராய் பகுதியை ஆட்டோ சென்றடைந்த போது, சிக்னலில் நிற்காமல் வேகமாக வந்த சொகுசு கார், ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த சந்தன் ஜா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்த 5 பேர் எய்ம்ஸ் விபத்து சிகிச்சைப் பிரிவு, சப்தர்ஜங் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சொகுசு கார் ஓட்டுநரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.