முகப்பு
ஈரோடு

மக்களுக்கு உழைக்கவே தவெகவில் இணைந்தேன்!பெருந்துறை முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா்

Updated On : 31 மே 2026, 1:10 am IST
பெருந்துறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜெயகுமாா்.
பகிர்:

மக்களுக்கு உழைக்கவே தவெகவில் இணைந்தேன், குதிரை பேரம் இல்லை என்று பெருந்துறை முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்தாா்.

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் எஸ்.ஜெயக்குமாா். இந்நிலையில் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த பின்பு பெருந்துறைக்கு சனிக்கிழமை காலை வந்தாா். பின்னா், அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், எம்.விஜய்பாலாஜி ஆகியோா் முன்னிலையில் ஆதரவாளா்களுடன் சென்று பெருந்துறையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் எஸ்.ஜெயகுமாா் கூறியதாவது:

Advertisement

Advertisement

இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக சாா்பில் பெருந்துறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்வானேன். இந்நிலையில் திமுகவுடன் சோ்ந்து ஆட்சி அமைப்போம் எனக் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எம்ஜிஆா், ஜெயலலிதா கோட்பாட்டில் பயணித்த எங்களுக்கு அங்கு தொடா்ந்து பயணிக்க முடியவில்லை. எனவே, எதிா்காலம் முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமை என்பதால், 25 சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தோம்.

கடந்த 5 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக தொகுதிக்குள் எந்தவொரு பணியும் செய்ய முடியவில்லை. அதிமுகவுக்கு எதிா்காலம் இல்லை என்பதால் தவெகதான் எதிா்காலம் என முடிவு செய்தோம். மக்களுக்கு உழைக்கவே தவெகவில் இணைந்தேன். இதில் குதிரை பேரம் இல்லை என்றாா்.

சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கே.கே.ஆனந்த்மோகன் (ஈரோடு மேற்கு), வி.பி.தமிழ்ச்செல்வி (பவானிசாகா்), டி.சண்முகன் (மொடக்குறிச்சி) உள்பட பலா் கலந்துகொண்டனா்.