தஞ்சாவூர்-விழுப்புரம் இரட்டை அகல ரயில் பாதை திட்டம்: மாநிலங்களவையில் வலியுறுத்தல்
தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை அகலப் பாதை திட்டப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் வா.மைத்ரேயன் வலியுறுத்தினார்.
தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை அகலப் பாதை திட்டப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் வா.மைத்ரேயன் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் அவர் திங்கள்கிழமை முன்வைத்த கோரிக்கை: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் உள்ள தஞ்சாவூர்-கும்பகோணம்-விழுப்புரம் வழித்தடம் அதிக பயணிகளின் ரயில் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ரயில் நிலையங்கள் "ஏ' பிரிவில் உள்ள ரயில் நிலையங்களாகும்.
தஞ்சாவூர்- விழுப்புரம் பிரிவில் செரிந்த கலாசாரம், சமயம், பாரம்பரியம் சார்ந்த, சுற்றுலாப் பயணிகள் அதிகம்
வரக்கூடிய முக்கிய தலங்கள் அமைந்துள்ளன. மேலும், இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் மூலம் அதிகம் வருவாய் கிடைக்கும்.
கும்பகோணம், மயிலாடுதுறை பகுதியில் இருந்து அரிசி, சர்க்கரை வெளியே அனுப்பப்படுகிறது. அதேபோன்று, உரமும், சிமெண்ட் சரக்குகள் உள் வரத்தாக உள்ளன. இந்த வழித்தடத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், நெரிசல் ஏற்பட்டு ரயில்கள் தாமதமும் ஏற்படுகிறது. ரயில் போக்குவரத்து கொள்திறன் ஏற்கெனவே அதிக அளவையும் எட்டிவிட்டது.
இதனால், தஞ்சாவூர்- விழுப்புரம் பிரிவை இரட்டை அகலப் பாதையாக மாற்றுவது மட்டுமே தேவையைப் பூர்த்தி செய்வதாக அமையும். ஆகவே, தஞ்சாவூர்- விழுப்புரம் வழித்தடத்தை இரட்டை அகல ரயில் பாதையாக மாற்ற முன்னுரிமையை அளித்து, மக்களின் ரயில் தேவையை அளிப்பதற்கான பணியை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.