முகப்பு
புதுதில்லி

என்சிஆரில் சிறு நகரங்களிலும் மாசு கண்காணிப்பு நடவடிக்கை

தில்லி, தேசியத் தலைநகர் வலய (என்சிஆர்) பகுதிகள் மட்டுமின்றி, என்சிஆர் பகுதியில் உள்ள சிறு நகரங்களிலும்

Updated On : 23 ஜனவரி 2019, 6:10 am IST
பகிர்:

தில்லி, தேசியத் தலைநகர் வலய (என்சிஆர்) பகுதிகள் மட்டுமின்றி, என்சிஆர் பகுதியில் உள்ள சிறு நகரங்களிலும் மாசுக் கண்காணிப்பு நடவடிக்கையை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக சிபிசிபி அதிகாரி கூறுகையில், "தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் உள்ள ஜஜ்ஜார், சோனிபட், பகதுர்கர் ஆகிய சிறிய நகரங்களில் அதிக மாசு உருவாவதற்கான செயல்பாடுகள் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. இவை தில்லியின் காற்றின் தரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இது போன்ற சிறு நகரங்களிலும் மாசுக் கண்காணிப்பு நடவடிக்கையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது' என்றார்.
அண்மையில் நடைபெற்ற தரவரிசை நடவடிக்கை திட்டக் குழு கூட்டத்தில் இது போன்ற நகரங்களில் கட்டுமானம் மற்றும் இடிப்பு செயல்பாடுகள், திறந்தவெளியில் கொட்டப்பட்ட கழிவுகளை எரிப்பது மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட விவகாரங்களை கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 
இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உயரதிகாரி, "பகதுர்கா, ஜஜ்ஜார், சோனிபட் ஆகிய நகரங்களில் தூசி உருவாகக்கூடிய செயல்பாடுகள் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. அதனால் இந்த விவகாரத்தை கவனித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்' என்று தெரிவித்திருந்தார்.
அண்மையில் ஆற்றல் மற்றும் வளங்கள் நிறவனம் (தெரி) மேற்கொண்ட ஆய்வில், காற்று மாசுவுக்கு தில்லியில் உருவாகும் மாசுக் காரணிகள் மட்டுமின்றி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகள், சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து தில்லி நோக்கி வரக்கூடிய காற்று மாசு ஆகியவைவும் காரணமாக இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த வாரம் தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நடத்திய கூட்டத்தின் போது, மாசு ஏற்படுத்தும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறைகளின் கள அதிகாரிகள் நேரடியாக சென்று நடவடிக்கை எடுக்கவும், மாநகராட்சிகள், வருவாய்த் துறையினர், தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவினர் ஆகியோர் தங்களது பிரதிநிதிகள் அடங்கிய குழுவை இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடுத்தி மாசு ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறியுமாறும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
தில்லி மற்றும் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளான குருகிராம், நொய்டா, காஜியாபாத், ஃபரீதபாத் ஆகிய நகரங்களில் காற்று மாசின் அளவு கடுமை மற்றும் மிகவும் மோசம் ஆகிய பிரிவுகளில் இருந்து வருகிறது. இதனால், காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) அந்தந்த மாநில அரசுகளின் உதவியுடன் ஈடுபட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.