தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் ஜனநாயகப் படுகொலையில் பாஜக: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையத்துடன் கூட்டுச் சேர்ந்து ஜனநாயகப் படுகொலையில் பாஜக ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல் ஆணையத்துடன் கூட்டுச் சேர்ந்து ஜனநாயகப் படுகொலையில் பாஜக ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிப் பொறுப்பாளரான ராகவ் சத்தா செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "இந்தியாவின் அடிப்படையான தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் ஆளும் மத்தியில் பாஜக அரசு உடைத்து வருகிறது.
தில்லியில் பாஜகவுக்கு ஆதரவு இல்லாத சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை ஆம் ஆத்மி கட்சி ஆதாரத்துடன் வெளியிட்டது. இருப்பினும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையில் சொல்லப்போனால், தேர்தல் ஆணையத்துடன் கூட்டுச் சேர்ந்து பாஜக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது' என்றார்.
பாஜகவுக்கு ஆதரவாக இல்லாதவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியும், பட்டியலில் கூடுதலாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பாஜகவும் மாறி மாறி பரஸ்பரம் புகார் தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி தலைமையிலான குழு தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை திங்கள்கிழமை சந்தித்தனர்.அப்போது ஜனநாயகத்தை குலைக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.