மழை நீர் சேகரிப்பு திட்டம்: தில்லி அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்
தில்லி பள்ளி, கல்லூரிகளில் மழை நீர் சேகரிப்பை நிறுவ வேண்டும் என்ற உத்தரவைச் செயல்படுத்தாத தில்லி அரசுக்கு
தில்லி பள்ளி, கல்லூரிகளில் மழை நீர் சேகரிப்பை நிறுவ வேண்டும் என்ற உத்தரவைச் செயல்படுத்தாத தில்லி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக தில்லி கல்வித் துறையின் மூத்த அதிகாரி, அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக தில்லியைச் சேர்ந்த மகேஷ் சந்திரா சக்சேனா தாக்கல் செய்திருந்த மனு தீர்ப்பாயத்தின் நீதிபதி ரகுவேந்திரா எஸ் ரதோர் அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "தில்லியில் உள்ள மொத்தம் 1,600 தனியார் பள்ளிகளில் 901 பள்ளிகளிலும், 742 அரசு பள்ளிகளில் 528 பள்ளிகளிலும் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "தில்லியில் அரசு உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறாத பள்ளிகள் எத்தனை உள்ளன. அனைத்து பள்ளிகளிலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை நிறுவாததற்கு காரணம் என்ன?' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு தில்லி அரசு வழக்குரைஞர் தகுந்த பதிலை அளிக்காததையடுத்து, தீர்ப்பாய அமர்வு கூறியதாவது:
தில்லியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று 2017, நவம்பர் 16ஆம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தில்லி அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. டெண்டர் விடப்பட்டுள்ளது என்று கூறப்படும் காரணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. இந்த வழக்கு ஜனவரி 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அன்றைய தினம் தில்லி கல்வித் துறையின் மூத்த அதிகாரி தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டது.