மீண்டும் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை
தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறையை மீண்டும்
தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் சஞ்சய் சிங் புதன்கிழமை கூறியதாவது:
பாஜகவிடம் இருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தே பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதை மின்னணு நிபுணர் சையது ஷுஜா உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, வாக்குப் பதிவுச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலில் வாக்குப் பதிவுச் சீட்டு முறையைப் பயன்படுத்துவதற்கு பாஜக ஏன் பயப்படுகிறது என்றார் அவர்.
லண்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவில் வசிக்கும் மின்னணு தொழில்நுட்ப நிபுணர் என்று கூறப்படும் சையது ஷுஜா, ஸ்கைப் மூலம் கலந்து கொண்டு பேசுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து முறைகேடு செய்யலாம் என்றும் இந்தியாவில் 2014 மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடந்தது என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.