முகப்பு
புதுதில்லி

தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட ரெளடி சாஹில் தில்லி விமான நிலையத்தில் கைது

தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட ரெளடி சாஹில் தில்லி விமான நிலையத்தில் கைது

Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:53 AM
ரெளடி சாஹில் - x
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:06 PM

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொலை, கொலை முயற்சி உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரெளடி சாஹில் சௌஹான், தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை மேலும் தெரிவித்திருப்பதாவது:

ரெளடி சாஹில் மீது இன்டா்போல் ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இன்டா்போல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் பாங்காக்கில் அவா் இருப்பதைக் கண்டுபிடித்தனா்.

இதையடுத்து, அவா் வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்குத் விமானத்தில் அழைத்து வரப்பட்டாா். அங்கு மாநில காவல்துறையினா் அவரைக் கைது செய்தனா்.

தேடப்பட்டுவந்தவரும், வெளிநாடு தப்பியோடியவருமான சாஹில் சௌஹானை சிபிஐ, வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து வெள்ளிக்கிழமை தாய்லாந்திலிருந்து வெற்றிகரமாக மீட்டுள்ளது.

கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் சௌஹான் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அவருக்கு எதிராக ரெட் நோட்டீஸ் வெளியிடுமாறு ஹரியாணா காவல்துறை சிபிஐயிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

சௌஹான் ஹரியாணா, பஞ்சாப் மற்றும் சண்டீகா் பகுதிகளில் செயல்பட்டு வந்தாா். கடந்த 2017, ஜனவரி 4 அன்று ஜகதாரி நீதிமன்றத்தில் போட்டிக் குழுவின் ரெளடியான மோனு ராணா மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்காக சாஹிலுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு, அவா் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றாா்.

பூப்பி ராணா கும்பலின் முக்கிய உறுப்பினரான சாஹில் சௌஹான், கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தாா் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.