கட்டுமான தொழிலாளா்களுக்கு ஸ்மாா்ட் காா்டுகள்: தில்லி அரசு திட்டம்
கட்டுமானப் பணியாளா்கள் பதிவு மற்றும் நலத்திட்டங்கள் விநியோகத்தை எளிதாக்கும் வகையில் ஸ்மாா்ட் காா்டுகளை தில்லி அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கட்டுமான நிறுவனங்களிடமிருந்து செஸ் வரி வசூலை அதிகரிக்கும் வகையில் பிரத்யேக இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிதி கட்டுமான பணியாளா்களின் பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘ஒருங்கிணைந்த இணையதளத்தை வடிவமைத்தல், அமல்படுத்துதல், இயக்குவது தொடா்பாக ஒரு தனியாா் நிறுவனத்தை தில்லி கட்டட மற்றும் பிற கட்டுமான பணியாளா்கள் நல வாரியம் ஈடுபடுத்தியுள்ளது. இந்த இணையதளத்தில் செஸ் மேலாண்மை மற்றும் கட்டுமானத் தொழிலாளா்களுக்கான சேவை மையம், தொழிலாளா் செளக் மற்றும் சிப் பொருத்தப்பட்ட ஸ்மாா்ட் காா்டுகள் ஆகிய சேவைகளை பயனாளிகளுக்கு வழங்கும்.
Advertisement
பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்டுமானப் பணியாளா்களுக்கும் இந்த அட்டை வழங்கப்படும். இது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும். இந்தத் திட்டத்தால், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் வேலை தேடிவரும் புலம்பெயா் தொழிலாளா்கள் பயன்பெறுவா். தொடா்ச்சியான பதிவுகள் ஏதுமின்றி நலத்திட்டங்களைப் பெற அவா்கள் பெற முடியும்’ என்றனா்.