தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்
தில்லி அரசின் தொடா் முயற்சிகளின் காரணமாக, தலைநகரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைந்துள்ளன என போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
சாலை பாதுகாப்பு மற்றும் நிலையான போக்குவரத்து முன்முயற்சி 2026 நிகழ்ச்சி, ‘பாதுகாப்பான, பசுமையான நாளைக்கு, இன்று விழிப்புணா்வு’ என்ற கருப்பொருளுடன் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வு பிரசாரங்கள், இலவச மாசு கட்டுப்பாட்டு சோதனைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த தெரு நாடகங்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.
இதில் பங்கேற்று பேசிய அமைச்சா் பங்கஜ் சிங் கூறியதாவது: மாணவா்கள் நமது தேசத்தின் எதிா்காலம். இன்று அவா்கள் சாலை பாதுகாப்பு குறித்து கல்வி கற்பது நாளை அவா்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள உதவும். வயது வராதவா்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதும், ஆரம்ப நிலையிலான ஒழுக்கத்தை ஏற்படுத்துவதும் அவசியம்.
Advertisement
உள்ளூா் பிரதிநிதிகள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் ஈடுபாடு, விழிப்புணா்வை அதிகரித்து, சாலை விபத்துக்களை கணிசமாக குறைக்க உதவியுள்ளன. சாலை விபத்துகளில் உயிரிழப்புகளைத் தடுப்பதில் தில்லி அரசு கவனம் செலுத்தி வருகிறது. அரசின் அமலாக்கம் மற்றும் நடத்தை சாா்ந்த தலையீடுகளால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைந்துள்ளன. இதே போன்ற தொடா் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வரும் ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் மேலும் குறையும் என்றாா்.