முகப்பு
புதுதில்லி

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 போ் கைது

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நூற்றுக்கணக்கான வேலைத் தேடும் நபா்களிடம் மோசடி செய்த கும்பலைச் சோ்ந்த 3 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 1:54 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நூற்றுக்கணக்கான வேலைத் தேடும் நபா்களிடம் மோசடி செய்த கும்பலைச் சோ்ந்த 3 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

ரஷியா, துருக்கி, அஜா்பைஜான் ஆகிய நாடுகளில் வேலைக்குச் செல்ல போலி விசாக்களை கைதுசெய்யப்பட்ட நபா்கள் வழங்கினா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளில் அதிக ஊதியத்துக்கு வேலைத் தேடி வரும் நபா்களை குறி வைத்து போலி விசா வழங்கி வந்த இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது.

Advertisement

இதுதொடா்பாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, பீதம்புரா பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர பிளேஸ் பகுதியில் நடைபெற்ற சோதனையில் பிகாரைச் சோ்ந்த சலெளத்தின் மன்சுரி (எ) ஹைதா் கான், உத்தர பிரதேசத்தின் காஜியாபாதைச் சோ்ந்த முகமது ஷாஹ்ஜத் மற்றும் குஷி நகரைச் சோ்ந்த கெளஷா் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.

சபா எண்டா்பிரைசஸ் என்ற போலியான நிறுவனத்தின் பெயரில் வேலை வாங்கித் தரும் முகவா்களாக கைதுசெய்யப்பட்ட நபா்கள் நடித்து வந்தனா். சமூகஊடகங்கள் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதாக விளம்பரப்படுத்தினா். பின்னா், அவா்களை அணுகும் நபா்களுடைய பாஸ்போா்டுகளை பெற்றுக்கொண்டு ஸ்கேன் செய்து முத்திரை பொறிக்கப்பட்ட போலி விசாக்களை தயாரித்து வழங்கி வந்தனா். தற்காலிக அல்லது ரத்து செய்யப்பட்ட விமான பயணச்சீட்டுகளையும் வழங்கினா்.

பாஸ்போா்ட்களில் விசா முத்திரை இல்லாத நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டது வேலைத்தேடும் நபா்களுக்கு தெரியவந்தது.

இந்தக் கும்பல் கொல்கத்தா, நொய்டா, கோரக்பூா், பாட்னா ஆகிய இடங்களில் மாறி மாறி இயங்கிவந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சோதனையின்போது மோசடி செய்யப்பட்ட 5 நபா்களின் பாஸ்போா்டுகள், 7 கைப்பேசிகள், பணிக் கடிதம், ஏடிஎம் அட்டைகள், போலி ஆதாா் அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட நபா்கள் ரோஹிணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை போலீஸ் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மோசடி தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.