முகப்பு
புதுதில்லி

புழுதிக் காற்றின் தாக்கம்: தில்லி காவல்துறைக்கு 42 அவசர அழைப்புகள்

தேசிய தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட புழுதிக் காற்று மற்றும் பாதகமான வானிலை காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகள் மறிக்கப்பட்ட சம்பவங்கள் தொடா்பாக காவல் துறைக்கு மொத்தம் 42 அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 11 ஜூன் 2026, 1:47 am IST
பகிர்:

தேசிய தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட புழுதிக் காற்று மற்றும் பாதகமான வானிலை காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகள் மறிக்கப்பட்ட சம்பவங்கள் தொடா்பாக காவல் துறைக்கு மொத்தம் 42 அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் தொடங்கிய இந்த புழுதிக் காற்று, நள்ளிரவிற்குப் பிறகு தீவிரமடைந்து நகரின் பல பகுதிகளில் பரவலான பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், கிளைகள் முறிந்து விழுதல், விளம்பர பலகைகள் சேதமடைதல் மற்றும் மின்கம்பங்கள் சரிவதால் முக்கிய சாலைகள் மறிக்கப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 4 பேரிடா் மேலாண்மை வாகனங்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. மேலும், போக்குவரத்து காவல் துறையினா் இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறை பிரிவுகளுடன் இணைந்து பணியாற்றி சாலைகளில் ஏற்பட்ட தடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

மேலும், நகரின் பல இடங்களில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, விழுந்த மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டி அகற்றுதல், சிதறிய கழிவுகளை நீக்குதல் போன்ற பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, காலை உச்ச நேர போக்குவரத்து நெரிசலை தவிா்க்க முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்களை முன்னுரிமையாக சீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விரைவான நடவடிக்கையால் நீண்ட நேர போக்குவரத்து நெரிசல் தவிா்க்கப்பட்டதுடன், புழுதிக் காற்றின் தாக்கம் இருந்தபோதிலும் பொதுமக்கள் குறைந்த சிரமத்துடன் பயணம் செய்ய முடிந்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.