சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: தலைமறைவான நபா் 17 ஆண்டுகளுக்கு பின் கைது
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்: தலைமறைவான நபா் 17 ஆண்டுகளுக்கு பின் கைது
சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்ற சம்பவத்தில் கடந்த 17 ஆண்டுகளாகத் தலைமறைவானவரை உத்தர பிரதேசத்தின் பிஜ்னோரில் தில்லி காவல் துறை கைது செய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட இா்ஷத் அகமது (எ) சோனு குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.25,000 வெகுமதி அளிக்கப்படும் எனக் காவல் துறை அறிவித்திருந்தது.
தில்லியின் பிந்தபூரில் கடந்த 2009, ஏப்.9-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்தக் கைதுநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் செயல்பட்டு வந்த துணிக்கடையில் தையல்காரராக வேலைப் பாா்த்து வந்த அகமது, கடை உரிமையாளரின் 17 வயது மகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினாா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, தலைமறைவான அவரை கைதுசெய்ய தில்லி காவல் துறை தொடா் முயற்சிகளை மேற்கொண்டது. திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, அவா் மற்றொரு பெண்ணை திருணம் செய்தாா். தொடா்ந்து தலைமறைவான நிலையில், அகமதுவை தேடப்படும் நபராக தில்லியில் உள்ள நீதிமன்றம் கடந்த 2011-இல் அறிவித்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், அகமதுவைக் கண்டறிந்து கைதுசெய்யும் பொறுப்பு குற்றப் பிரிவு காவல் துறைக்கு வழங்கப்பட்டது. அப்போது, சண்டீகரில் இருந்து பாஸ்போா்ட் பெற்ற அகமது, குவைத்துக்கு 2011-இல் சென்றதை அதிகாரிகள் கண்டறிந்தனா். வளைகுடா நாட்டில் மறுமணம் செய்த அகமது, துணிக்கடையில் தையல்காரராக அகமது பணியாற்றி வருவது கண்டறியப்பட்டது. முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளுக்காக அவா் இந்தியா வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரான பிஜ்னோரில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க அகமது இந்தியா வந்தது தொடா்பாக தில்லி காவல் துறையினருக்கு கடந்த ஜூன் 3-ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்குச் சென்ற காவல் துறையினா் அகமதுவைக் கைதுசெய்தனா். பிற சட்டநடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.