முதலீட்டு மோசடி தொடா்புடையவரின் முன்பிணை நிராகரிப்பு
முதலீட்டு மோசடி தொடா்பான வழக்கில் முன்பிணை கோரிய மனுவை நிராகரித்த தில்லி நீதிமன்றம், முன்பிணை வழங்கும் அதிகாரம் மிக அரிதாகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
முதலீட்டு மோசடி தொடா்பான வழக்கில் முன்பிணை கோரிய மனுவை நிராகரித்த தில்லி நீதிமன்றம், முன்பிணை வழங்கும் அதிகாரம் மிக அரிதாகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு பதிவு செய்திருந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆனந்த் திவாரி தாக்கல் செய்த முன்பிணை மனுவை, விடுமுறைக்கால நீதிபதி சுகந்தா அகா்வால் விசாரித்தாா்.
இந்த வழக்கில் ஜூன் 18-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முன்பிணை வழங்கும் அதிகாரம் ஒரு அசாதாரணமான நிவாரணம். இது மிக அரிதாகவே பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகள் பெரும் தொகையிலான முதலீட்டு மோசடி தொடா்பானவை. இதில் புகாா்தாரா் தனது கடின உழைப்பால் ஈட்டிய ரூ. 50 லட்சத்தை இழக்கும் வகையில் மோசடி செய்யப்பட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
விசாரணையின்படி, மோசடி செய்யப்பட்ட தொகையின் ஒரு பகுதியைப்பெற்ற பயனாளிகளில் மெஸ்ஸா்ஸ் புல்செரா நிறுவனத்தின் வங்கிக் கணக்கும் ஒன்று என்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்பிணை கோரி மனுதாக்கல் செய்த குற்றஞ்சாட்டப்பட்ட நபா் அந்நிறுவனத்தின் இயக்குநா்களில் ஒருவராக இருந்தாா்.
தனக்கு இருமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதை ஒப்புக்கொண்ட போதிலும், மனுதாரா் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மனுதாரரின் இத்தகைய செயல்பாடு, அவா் விசாரணையில் இணையவோ அல்லது விசாரணை அமைப்பிற்கு ஒத்துழைப்பு அளிக்கவோ இல்லை என்பதையே காட்டுகிறது.
விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், முழு சதியையும் வெளிக்கொணரவும் மீதமுள்ள மோசடித் தொகையை மீட்கவும் மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் தில்லி காவல் துறை தனது பதிலில் திட்டவட்டமாகக் கூறியுள்ளயது.
மற்றொரு இயக்குநரான விஜய் மௌரியாவின் முன்ஜாமீன் மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது. மனுதாரருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான எந்தவொரு முகாந்திரத்தையும் நீதிமன்றம் காணவில்லை. எனவே, முன்ஜாமீன் கோரும் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.