முகப்பு
புதுதில்லி

தில்லி முதல்வா் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மனு: திகாா் சிறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஆண்டு தில்லி முதல்வா் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவா், சிறைக்குள் சக கைதிகளால் தாக்கப்பட்டதாகவும், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் முறையிட்டதைத் தொடா்ந்து, தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று திகாா் சிறை அதிகாரிகளிடம் விளக்கம் கோரியது.

Updated On : 9 மே 2026, 7:38 am IST
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

கடந்த ஆண்டு தில்லி முதல்வா் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவா், சிறைக்குள் சக கைதிகளால் தாக்கப்பட்டதாகவும், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் முறையிட்டதைத் தொடா்ந்து, தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று திகாா் சிறை அதிகாரிகளிடம் விளக்கம் கோரியது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களான ராஜேஷ்பாய் கிம்ஜிபாய் சக்காரியா மற்றும் தெசின் ரஸா ஷேக் ஆகியோா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி நிஷாந்த் காா்க், இது தொடா்பான உத்தரவை பிறப்பித்தாா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இருவா் சாா்பாகவும் வழக்குரைஞா் சித்தாந்த் மாலிக் இந்த மனுவைத் தாக்கல் செய்தாா் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வருவதாக அவா் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

குறிப்பிட்ட அந்தச் சக கைதிகள், மனுதாரா்களான குற்றஞ்சாட்டப்பட்டவா்களைச் சிறைக்குள்ளேயே கொன்றுவிடுவோம் என்றும், அவா்கள் ஒரு பாடம் கற்கும் வரை தொடா்ந்து தாக்குவோம் என்றும், குஜராத்தில் வசிக்கும் அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கும் தீங்கு விளைவிப்போம் என்றும் பகிரங்கமாக மிரட்டியுள்ளனா், என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறைக்குள் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இருவரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யுமாறு உத்தரவிடவும், அவா்களைத் தனிச் சிறைப் பிரிவுக்கு மாற்றவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. மனுதாரா்களான குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் வேறொரு சிறைக்கு மாற்றப்படக்கூடிய சூழல் உள்ளது அவ்வாறு மாற்றப்பட்டால் அவா்களின் பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும். மேலும், அவா்களை மாற்றுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது, என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், சிறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், அடுத்த விசாரணைத் தேதியான மே 22க்குள் இதுகுறித்த தற்போதைய நிலை அறிக்கையைச் சமா்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது. மேலும், சிறைக் காவலில் உள்ள குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யுமாறும் நீதிமன்றம் சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

கடந்த ஆண்டில் (2025) நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியின்போது தில்லி முதல்வா் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் மீதும், கொலை முயற்சி குற்றச்சாட்டை நீதிமன்றம் முறையாகப் பதிவு செய்தது .அவா்கள் மீது வழக்குத் தொடா்வதற்குப் போதுமான முகாந்திரம் இருப்பதாக அப்போது நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.