கூடங்குளம் 1ஆவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகா வாட் திறன் கொண்ட 2 அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் 3-வது அணுஉலைக்கான கட்டுமானப்பணிகள் முடிவடைந்து மின்உற்பத்தி செய்வதற்கான பிரதான பணிகள் நடைபெற்று வருகிறது. 4, 5,6 அணுஉலைகளுக்கான கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
Advertisement
இந்நிலையில் முதலாவது அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. மேலும், தொழில்நுட்ப கோளாறை சீரமைக்கும் பணியில் அணுவிஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநா்களும் ஈடுபட்டு வருகின்றனா்; விரைவில் பழுது நீக்கப்பட்டு மின்உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின்நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனா்.
முதலாவது அணுஉலை இயங்காததால் தமிழ்நாட்டிற்கு கிடைத்து வந்த 576 மெகாவாட் மின்சாரத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது.