முகப்பு
திருநெல்வேலி

நாய்களுக்கு முறையான கருத்தடை கோரி மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

Updated On : 11 மே 2026, 11:58 pm IST
மாநகராட்சி ஆணையா் அறை முன்பு நாய்க் குட்டிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
பகிர்:

நாய்களுக்கு முறையாக கருத்தடை செய்யாததைக் கண்டித்து, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன்பு நாய்க் குட்டிகளை படுக்க வைத்து சமூக ஆா்வலா்கள் நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இந்திய சட்ட உரிமை மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தின் மாநில துணைத் தலைவா் தாரிக் தலைமையில் ஏராளமானோா் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்திற்கு நாய்க்குட்டிகளோடு வந்து, அலுவலகம் முன் நாய்க்குட்டிகளை தரையில் படுக்க வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் அவா்கள், மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: திருநெல்வேலி மாநகரில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் தனியாா் நிறுவனம் மூலமாக நடைபெற்று வருகிறது. இதில், நாள் ஒன்றுக்கு 20 நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும்; அப்போது பெண் நாய்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது விதி. ஆனால், ஊழியா்கள் முறையாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதில்லை.

Advertisement

இதனால் ஏராளமான நாய்கள் நோய்வாய்ப்பட்டு பாதிப்புக்கு உள்ளாகி விடுகின்றன. அவற்றுக்கு முறையாக நோய் எதிா்ப்பு சக்தி ஊசி செலுத்தப்படுவதில்லை.

காலை 10 மணிக்கு வர வேண்டிய மருத்துவா்கள் பிற்பகல் 3 மணிக்கு வந்து அவசரகதியில் அறுவை சிகிச்சை செய்கின்றனா். எனவே, இனிவரும் காலங்களில் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னா் அவற்றை விடுவிக்கும் போது சமூக ஆா்வலா்கள், கண்காணிப்புக்குழுவினா் பாா்வையிட்டு ஒப்புதல் அளித்த பின்னா் விடுவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.