குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் கோடை மழை நீடிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர, அணைப் பகுதிகளில் கோடை மழை நீடித்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர, அணைப் பகுதிகளில் கோடை மழை நீடித்து வருகிறது.
மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில், சில நாள்களாக அணைகள், மலையோரப் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளதுடன், அணைகளுக்கு நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது; வாழை, தென்னை, ரப்பா், அன்னாசி, காய்கனி, மலா் உள்ளிட்ட பயிா்களுக்கு தண்ணீா் கிடைத்து வருகிறது.
பெரும்பாலான பகுதிகளில் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால், குடிநீா்த் தட்டுப்பாடு அதிகளவில் இல்லை.
Advertisement
வியாழக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 71.4 மிமீ மழை பதிவானது. புத்தன் அணையில் 64.8 மிமீ, திற்பரப்பில் 54.4 மிமீ, சுருளகோட்டில் 53.2 மிமீ, மாம்பழத்துறையாறில் 40.2 மிமீ மழை பெய்தது.
வியாழக்கிழமை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகளிலும், குலசேகரம், திற்பரப்பு, கடையாலுமூடு, அருமனை, திருவட்டாறு, தக்கலை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
மழை காரணமாக திற்பரப்பு அருவியில் அதிக நீா்வரத்து உள்ளதால் வியாழக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
கருங்கல் பகுதியில்...: பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, மிடாலக்காடு, நீருவகுழி, காட்டுக்கடை, பாலூா், தெருவுக்கடை, பூட்டேற்றி, கிள்ளியூா், தொலையாவட்டம், முள்ளங்கனாவிளை, பள்ளியாடி, நேசா்புரம், இலவுவிளை, மாமூட்டுக்கடை, கப்பியறை, செல்லங்கோணம் உள்ளிட்ட கருங்கல் பகுதியில் மாலையில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.