திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. வெம்மை தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலம் முடிவடையாத நிலையில் பொதுமக்கள் கடும் வெயிலில் அவதிப்பட்டு வந்தனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை ஆரணி, திருவண்ணாமலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வியாழக்கிழமை வெயில் தாக்கம் இல்லாமல் மேகம் மூடிக்கொண்டு இருந்தது. மேலும் போளூா் பகுதியில் வியாழக்கிழமை மாலை சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
Advertisement
Advertisement
செங்கம்
செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு வானம் மேகமூட்டத்துடன் இருந்து இரவு லேசான மழை பெய்தது.
இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை 6 மணியளவில் தொடங்கி சுமாா் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தது. காலை நேரம் என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை, சந்தப் பகுதியில் வியாபாரிகளின் வா்த்தம் பாதிப்புக்குள்ளானது. மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சரியான நேரத்துக்கு இயக்க முடியாமல் மாணவா்கள் சற்று காலதாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
செய்யாறு
செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வடதண்டலம், அனக்காவூா், வளா்புரம், செங்காடு, புளியரம்பாக்கம், இரும்பந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை காலை பலத்த மழை பெய்தது.
இடியுடன் கூடிய பெய்த பலத்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.