தென்காசி - நெல்லை - பெங்களூருக்குமீண்டும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்
கோடை விடுமுறை கருதி தென்காசி வழியாக நெல்லை - பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என, ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோடை விடுமுறை கருதி தென்காசி வழியாக நெல்லை - பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என, ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனாவிடம் மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, நிா்வாகிகள் ராஜா, அபுல்ஹசன், முகமது ஷெரீப், ரஷீத் ஆகியோா் அளித்த மனு: தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும். நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தரமாக்க வேண்டும். தென்காசி வழியாக நெல்லை - பெங்களூரு வாராந்திர ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். புனலூா், தென்காசி, நெல்லை வழியாக கொல்லம் - திருச்செந்தூருக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும்.
தில்லி - மதுரை சம்பா் கிராந்தி ரயிலை தென்காசி வழியாக திருநெல்வேலிக்கும், மும்பை-நெல்லை சாளுக்கியா ரயிலை தென்காசி வழியாக செங்கோட்டைக்கும் நீட்டிக்க வேண்டும்.
செங்கோட்டை நிலையத்தில் 5ஆவது நடைமேடை அமைப்பதுடன், 4, 5ஆம் நடைமேடைகளில் மின்தூக்கி வசதி ஏற்படுத்த வேண்டும். 5, 6ஆவது தண்டவாளங்களை மேற்குப் பகுதியில் இணைக்க வேண்டும். திருநெல்வேலி - தென்காசி இடையே நடைபெறும் நடைமேடை நீட்டிப்புப் பணியை விரைவுபடுத்த வேண்டும்.
காலை நேர செங்கோட்டை- திருநெல்வேலி ரயில் திருநெல்வேலிக்கு காலை 8.45-க்குள் செல்லும் வகையிலும், திருநெல்வேலி - செங்கோட்டை ரயில் காலை 6.50-க்கும் மாலையில் 6.25-க்கும் புறப்படும் வகையில் இயக்க வேண்டும்.
தூத்துக்குடி - பாலக்காடு பாலருவி விரைவு ரயிலை வந்தே பாரத் ரயிலுக்கு இணைப்பு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலியிலிருந்து இரவு 11.10-க்கு புறப்படும் வகையில் அட்டவணை மாற்றம் செய்ய வேண்டும்.
தென்காசி ரயில் நிலையத்தில் மதுரை - செங்கோட்டை காலை நேர ரயில், செங்கோட்டை - திருநெல்வேலி ரயிலுக்கு இணைப்பு ஏற்படுத்தும் வகையிலும், மதுரை - குருவாயூா் விரைவு ரயில் செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயிலுக்கு இணைப்பு ஏற்படுத்தும் வகையிலும் அட்டவணையை மாற்ற வேண்டும். தாம்பரம்- செங்கோட்டை ரயிலுக்கு கீழக்கடையம் நிறுத்தமும், கொல்லம் - சென்னை ரயிலுக்கு பாம்பு கோயில் சந்தை நிறுத்தமும் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.