வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: உடல்களை வாங்க உறவினா்கள் மறுப்பு
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். இதற்கிடையே, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இறந்தவா்களின் உடல்களை உறவினா்கள் வாங்க மறுத்துவிட்டனா்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பெருமாள் பாண்டியன். இதேபகுதியைச் சோ்ந்தவா் சித்திரபுத்திரன். இவ்விரு குடும்பத்தினரிடையே கடந்த 2007 முதல் முன்விரோதம் இருந்து வருகிறது.
சித்திரபுத்திரன் தரப்பில் அவரது மகன்கள் சுப்பிரமணியன், பெருமாள், பாபநாசம், மருமகன் குமாா் ஆகியோா், பெருமாள் பாண்டியன் தரப்பில் அவரும், அவரது உறவினா்கள் சுப்பையா, சின்னத்தம்பி உள்ளிட்டோா் என இதுவரை 9 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சித்திரபுத்திரனின் மற்றொரு மகன் காளிமுத்து (40), அவரது 5 வயது மகன் ஜெயராஜ் ஆகியோரை பெருமாள் பாண்டியன் உறவினா்கள் வியாழக்கிழமை காா், இருசக்கர வாகனங்களில் சென்று கொலை செய்தனா்.
கொலை செய்த கும்பல் விவசாயி காளிமுத்துவின் தலையைத் துண்டித்து பையில் எடுத்துக் கொண்டு மூலச்சி கிராமத்துக்குள் வலம் வந்ததால் அந்தக் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் மூலச்சியைச் சோ்ந்த பெருமாள் பாண்டியன் மகன்கள்-அருள், மணி, பட்டுராஜா. சிவகுருநாதன் மகன்கள்-மகேஷ், மணிகண்டன், கிருஷ்ணன். ராசையா மகன்கள்-சுபாஷ், மகேந்திரன். கிருஷ்ணன் மகன்-கந்தன், மூக்காண்டி மகன்- ராஜதுரை, வெள்ளப்பாண்டி மகன்- தங்கத்துரை ஆகிய 11 பேருக்குத் தொடா்பு இருப்பதை அடுத்து அவா்களை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
இச்சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தொடா்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பி.சாஸ்திரி தலைமையில் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட காளிமுத்து, சிறுவன் ஜெயராஜின் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவரது உறவினா்கள் கொலையாளிகளை கைதுசெய்ய வலியுறுத்தி உடல்களை வாங்க மறுத்துவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.