முகப்பு
மதுரை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்ய கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளா் உள்பட 9 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதிப்படுத்தக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 5 ஜூன் 2026, 6:23 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளா் உள்பட 9 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதிப்படுத்தக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31). கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பொது முடக்கத்தின் போது, அனுமதித்த நேரத்தைவிடக் கூடுதலாக தங்களது கைப்பேசி கடையை திறந்து வைத்திருந்தனா். இதன்காரணமாக, சாத்தான்குளம் போலீஸாா் அவா்களை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனா்.

இதுதொடா்பான வழக்கில் அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் உதவி ஆய்வாளா் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரும் சிறையில் உள்ளனா். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

Advertisement

Advertisement

மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, காவலா்கள் 9 பேரும் குற்றவாளிகள் எனக் கூறி, மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி, சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஐ தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் தெரிவித்ததாவது:

தண்டனை பெற்ற குற்றவாளிகள் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இதுவரை காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், காவலா் தாமஸ் தவிர, மற்ற குற்றவாளிகள் மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனா் என்றனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கைப் பொருத்தவரை, தற்போதைய அமா்வு விசாரிக்க வேண்டுமா அல்லது இனி வர உள்ள நீதிபதிகள் அமா்வு விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து வழக்குரைஞா்கள் முடிவெடுத்து பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.