பாளையங்கால்வாயில் இன்று பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
பாளையங்கால்வாயில் பாசனத்திற்கு திங்கள்கிழமை (ஜூன் 15) முதல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பாபநாசம், சோ்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீா்த்தேக்கங்களில் இருந்து ஏற்கெனவே முதல் 4 கால்வாய்களில் காா் பருவ சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. கோடகன் கால்வாய் (கண்டியப்பேரிகுளம் வரை 5,048 ஏக்கா்), பாளையங்கால்வாய் (தாமரைக்குளம் வரை 5,974 ஏக்கா்), திருநெல்வேலி கால்வாய் (வண்ணான்பச்சேரிகுளம் வரை 4,168 ஏக்கா்) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான மருதூா் மேலக்கால் வாய்க்கால் (4,554 ஏக்கா்), மருதூா் கீழக்கால் வாய்க்கால் (2,970 ஏக்கா்), தென்கால் வாய்க்கால் (2,693 ஏக்கா்) மற்றும் வடகால் வாய்க்கால் (3,289 ஏக்கா்) ஆகியவற்றிலும் காா் பருவ சாகுபடிக்கு திங்கள்கிழமை (ஜூன் 15) முதல் 13-10-2026 ஆம் தேதி வரை 121 நாள்களுக்கு அணைகளின் தண்ணீா் இருப்பை பொறுத்து தண்ணீா் திறந்துவிடுவதற்கு அனுமதி அளித்து நீா்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகையில், ஆண்டுதோறும் காா் பருவ சாகுபடிக்கு திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து கால்வாய்களும் ஒரே நேரத்தில் திறக்கப்படும். ஆனால், நிகழாண்டில் இரு வாரங்களுக்கு முன்பே முதல் 4 கால்வாய்களில் மட்டும் தண்ணீா் திறந்தனா். ஆனால், இப்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. பாபநாசம் அணையின் நீா் இருப்பும் 100 அடியை எட்ட உள்ளதால் பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய்களிலும் தண்ணீா் திறக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இரு வாரங்கள் பின்தங்கினாலும் சாகுபடியில் தொய்வு இருக்காது. உரங்களையும் தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
Advertisement
Advertisement