டிராக் ரெகார்ட்! பயிர்க்கடன் தள்ளுபடி - முதல்வர் விஜய் சொன்னதும் செய்ததும்!
தேர்தல் வாக்குறுதிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக த.வெ.க. தலைவரும் முதல்வருமான சி. ஜோசப் விஜய் சொன்னதும் செய்ததும் பற்றி...
விவசாயிகளுக்கான பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்த தவெக தலைவர் சி. ஜோசப் விஜய், முதல்வராகப் பொறுப்பேற்ற பின் ரூ. 50,000 வரை கடன் தள்ளுபடி என அறிவித்திருக்கிறார்.
உள்ளபடியே வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறாரா?
வாக்குறுதி
தவெக தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி பற்றி என்ன சொல்லியிருந்தார்கள்? தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்காக அளிக்கப்பட்டிருந்த 4 வாக்குறுதிகளில் முதலாவது: “5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்குக் கூட்டுறவுப் பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
என்ன செய்திருக்கிறார்கள்?
தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், கடந்த மே 25 ஆம் தேதி கடன் ரத்து தொடர்பாக அறிவித்தார். “கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து” என்று அரசாணை வெளியிடப்பட்டது.
“இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி முழுமையாக ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 1.5.2025 முதல் 28.2.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ. 5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.
இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 1.5.2025 முதல் 28.2.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால், அரசுக்கு ரூ. 2.044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ. 50,000 கடன் பெற்றிருந்தால், முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படும். சிறு விவசாயிகளுக்கு 50% (ரூ. 25,000) தள்ளுபடி செய்யப்படும்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வரவேற்பும் எதிர்பார்ப்பும்
இவ்வாறான சூழலில், “அனைத்து விவசாயிகளும் ஒரே உணவு தானியங்களைத்தான் உற்பத்தி செய்கின்றனர். தமிழ்நாட்டில் எந்த முதல்வரும் அறிவிக்காத வகையில், சிறு, குறு, பெரிய விவசாயிகள் என விவசாயிகளைத் தரம் பிரித்துக் கடன் தள்ளுபடி அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது” என காவிரி விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து முதல்வருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
குறிப்பிட்ட அளவிலான கடன்களைத் தள்ளுபடி செய்வதால், கூட்டுறவு வங்கிகளில் அந்தக் கடனில் ஒரு பகுதி குறைந்திருந்தாலும், கடன் அப்படியேதான் இருக்கும், மீண்டும் வங்கிகளில் புதிதாகக் கடன் வாங்க இயலாது. முழுமையாகக் கடன் தள்ளுபடி செய்தால் மட்டுமே புதிய கடன்கள் பெற முடியும் என்றும் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் 2006-ல் முதல்வராக மு. கருணாநிதி பதவியேற்றதும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற சுமார் ரூ. 7,000 கோடி கடன்களையும், 2016-ல் ஜெ. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ரூ. 5,780 கோடி கடன்களையும் தள்ளுபடி செய்திருந்தனர். இதனால், நில வரம்பு வேறுபாடின்றி அனைத்துப் பிரிவைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்தனர்.
2021 பிப்ரவரியில், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆட்சியில் பாரபட்சமின்றி, ரூ. 12,110 கோடி அளவில் அனைத்துத் தரப்பு விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், தற்போது முதல்வர் விஜய்யின் உத்தரவுப்படி, குறிப்பாக குறு விவசாயிகளுக்கான கடன்கள் ரூ. 2.044.46 கோடி அளவுக்கே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1 ஹெக்டேர் அல்லது 2.5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ளவர்கள் குறு விவசாயிகளாகவும், 1 முதல் 2 ஹெக்டேர் அல்லது 2.5 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளோர் சிறு விவசாயிகளாகவும் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
காவிரி டெல்டா மண்டலத்தில் (முக்கியமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்) விவசாயம் செய்யும் ஒட்டுமொத்த விவசாயிகளில் 90 முதல் 95 சதவிகிதம் வரை சிறு மற்றும் குறு விவசாயிகள்தான் உள்ளனர்.
காவிரி டெல்டா விவசாயிகளில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் 2.5 முதல் 5 ஏக்கர் நிலத்துக்கு மேல் வைத்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது, மிகக் குறைந்தளவிலேயே பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் 2.5 ஏக்கருக்கும் அதிகமான நிலம் வைத்துள்ள விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூரில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் தவெக தலைவரான விஜய், “மற்றவர்களை மாதிரி தேர்தல் வாக்குறுதி என்று ஏமாற்றுவது கிடையாது. நம்மை நம்பும் மக்களுக்கு நம்பிக்கை தருவது. 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கி பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்வதற்கும், 5 ஏக்கருக்கு மேலுள்ள விவசாயிகள் பெற்றுள்ள கடன்களில் 50 சதவிகிதத்தை தள்ளுபடி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உறுதியாக நடவடிக்கை எடுப்போம். திமுக மாதிரி தகுதி ஃபிக்ஸ் (fix) பண்ணி பாகுபாடு காட்டி ஏமாற்ற மாட்டோம்” என்றும் தெரிவித்திருந்தார்.
கடந்த தேர்தலில் திமுக, அதிமுக இரு திராவிடக் கட்சிகளையும் புறக்கணித்துவிட்டுத் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகத்தையும் விஜய்யை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். முந்தைய ஆட்சியிலிருந்த அதிமுக, திமுக காலத் திட்டங்கள் தொடரும் என்றும் முதல்வர் விஜய்தெரிவித்திருக்கிறார்.
நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் இன்றி அதிமுக, திமுகவைப் போல தவெக அரசும் விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?