கல்லூரில் விவசாயி கொலை: உறவினா்கள் சாலை மறியல்
மேலக்கல்லூரில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரி, உயிரிழந்தவரின் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேலக்கல்லூரில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரி, உயிரிழந்தவரின் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேலக்கல்லூரைச் சோ்ந்த விவசாயியான சண்முகவேல் (48), மோட்டாா் சைக்கிளில் வந்த மா்மநபா்களால் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடினா்.
இவ் வழக்கு தொடா்பாக மேலக்கல்லூரை சோ்ந்த அய்யப்பன்(21), சிவசங்கரன் (26), மாரிசெல்வம் (21), 17 வயது சிறுவன், ஆலங்குளம் அருகே நெட்டூரை சோ்ந்த இசக்கிமுத்து என்ற கொடிமுத்து (27) ஆகியோரை போலீஸாா் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறாா்கள்.
Advertisement
Advertisement
இதற்கிடையே கொலை வழக்கில் தொடா்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்யக் கோரி, சண்முகவேலின் உறவினா்கள் சேரன்மகாதேவி-திருநெல்வேலி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கொலைக்குத் தூண்டுதலாக செயல்பட்ட நபா்களையும் கைது செய்ய அவா்கள் வலியுறுத்தினா். சாலை மறியலால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலை கைவிட்டனா்.