விவசாயி கொலை வழக்கு: மகன் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விவசாயி கொலை வழக்கில் அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விவசாயி கொலை வழக்கில் அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.
நடுவீரப்பட்டு காவல் சரகம், பத்திரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன்(62). இவரது மனைவி ஜெயசுந்தரி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மகள்கள் இருவா் திருமணமாகி கணவா் வீடுகிளில் வசிக்கின்றனா். மகன் ராஜாராம், திருமணமாகவில்லை.
குணசேகரன் பத்திரக்கோட்டை - புலியூா் சாலையில் உள்ள தனது விவசாய நிலத்திலேயே தங்கி வசித்து வந்தாா். இந்த நிலையில், அவா் அங்கு வியாழக்கிழமை காலை கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்த சம்பவம் தொடா்பாக குணசேகரன் மகன் ராஜாராமை (27) பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
இதில், ராஜாராம் ஆந்திரத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து வந்த நிலையில், அவா் அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள தந்தை குணசேகரன் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். மேலும், அவரிடம் பாசம் காட்டாமல் தந்தை தனித்து இருந்ததால், அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாம். இதனால், நிலத்தில் இருந்த தந்தையை கொலை செய்துவிட்டதாக ராஜாராம் தெரிவித்தாராம். இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.