அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி கோவில்பட்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட தாமஸ் நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள்
இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட தாமஸ் நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட லாயல் மில் காலனி, ஆசிரியர் காலனி, தங்கப்ப நாடார் காலனி, மூக்கரை விநாயகர் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை டிராக்டரில் கொண்டு வந்து தாமஸ் நகரில் டாக்டர் அம்பேத்கர் ஹாக்கி மைதானம் அருகே குப்பைகளைக் கொட்டி தீ வைக்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மேலும், ஹாக்கி மைதானம் அருகே குப்பைகளை தட்டுவதை தவிர்க்க வேண்டும். தாமஸ் நகர் பகுதியில் வாருகாலை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலர் மாடசாமி தலைமையில், இளஞ்சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் சுப்பிரமணியன், கட்சி பொறுப்பாளர் சுப்பையா, ஊர் நாட்டாண்மை பெரியமாடசாமி, இளஞ்சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பாளர் மைக்கேல், தொண்டரணியைச் சேர்ந்த இசக்கிமுத்து உள்ளிட்ட பலர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் கோரிக்கை மனுவை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) சசிகுமாரிடம் அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தங்கள் கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்று முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்:
இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூர் பகுதி மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை வழங்க வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனர்.
பின்னர் கோரிக்கை மனுவை துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (நிர்வாகம்) அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்ற பின், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணி வழங்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.