எட்டயபுரம் அருகே கன்னக்கட்டை கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
எட்டயபுரம் அருகே கன்னக்கட்டை கிராமத்தில் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்நிலை பகுதிகள் மற்றும்
எட்டயபுரம் அருகே கன்னக்கட்டை கிராமத்தில் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்நிலை பகுதிகள் மற்றும் மயான வழித்தட பாதை ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் புதன்கிழமை அகற்றினர்.
எட்டயபுரம் வட்டம், கன்னக்கட்டை கிராமத்தில் உள்ள ஊருணியையும், ஊருணி அருகேயுள்ள மயான பகுதியையும் அதற்கான வழித்தடத்தையும் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து தோட்டம் அமைத்து இடையூறு செய்து வருவதாகவும், இதனால் மயானத்தையும், வழித்தடத்தையும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அருந்ததியர் சமுதாய மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நாளில் மனு அளித்திருந்தனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் உத்தரவிட்டதையடுத்து, எட்டயபுரம் வட்டாட்சியர் சூர்யகலா தலைமையில் துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர்கள் கோட்டைச்சாமி, சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி காளை மற்றும் வருவாய்த் துறையினர் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் 30 சென்ட் அளவுக்கு நீர்நிலை பகுதியும், மயான நிலப்பகுதியும் அதன் வழித்தடமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தோட்டம் அமைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக வருவாய்த் துறை ஆவணங்களின் படி அளவீடு செய்து எல்கை குறியீடு இடப்பட்டு நீர்நிலை, மயான நிலப்பகுதி மற்றும் அதன் வழித்தட பாதை ஆக்கிரமிப்புகள் அனைத்தும் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.