தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் 30 பேர் கைது
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த 13 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தூக்கி வீசிவிட்டு தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்த சிப்காட் போலீஸார் இந்திய மாணவர் சங்க நிர்வாகள் இசக்கிமாரி, மாசானம், மாரிசெல்வம், ஜாய்சன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், மாணவர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை தென்பாகம் காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
இதையெடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சி மாநகர செயலர் தா. ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் முத்து, மாதர் சங்க மாவட்டச் செயலர் பூமயில் உள்ளிட்ட 30 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.