தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ. 996 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ரூ. 996 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ரூ. 996 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அனைத்துத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
தூத்துக்குடி மாவட்டத்துக்காக முதல்வர் அறிவித்த அனைத்து புதிய திட்டங்களையும் அலுவலர்கள் சிறப்பாக விரைந்து முடிக்க வேண்டும். பொலிவுறு நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) தேர்வு செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், வடிகால் பணிகள், எல்ஈடி மின் விளக்கு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ரூ. 996 கோடியில் நடைபெற உள்ள வளர்ச்சிப் பணிகளை விரைந்து தொடங்கி, 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மின்சாரம், கழிவறை, குடிநீர் வசதி இல்லாத மையங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியின் மூலம் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஏற்கெனவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 446 வீடுகளுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதியையும் விரைந்து செய்து கொடுக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், சார் ஆட்சியர் பிரசாந்த், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.