நடத்துநர் - போலீஸார் மோதல்: கோவில்பட்டியில் அரசுப் பேருந்துகள் நிறுத்தம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநருக்கும்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநருக்கும், காவல் துறையினருக்கும் ஏற்பட்ட தகராறையடுத்து, கோவில்பட்டியில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புளியங்குடி பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்து திருநெல்வேலிக்குச் செல்வதற்காக கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய நுழைவு வாயிலின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்ததாம். நடத்துநர் ரூபன்குமார் பேருந்தின் அருகே நின்று கொண்டிருந்ததாராம். அப்போது அவருக்கும், அங்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
தகராறு முற்றிய நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நடத்துநரை போலீஸார் தாக்கி, மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனராம். இதையறிந்த மற்ற அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து எந்த ஊருக்கும் பேருந்துகள் செல்ல முடியவில்லை. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
கோவில்பட்டி போக்குவரத்துக் கழக பணிமனை கிளை மேலாளர் ரமேசன், டி.எஸ்.பி. ஜெபராஜ் மற்றும் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகளிடையே பேச்சுவார்த்தை மேற்கு காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இரவு 8.15 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் இரவு 10.30 மணிக்கு முடிவடைந்ததையடுத்து பேருந்துகள் தொடர்ந்து இயங்கின.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.