ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வணிகவரித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம், சார்- ஆட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், வணிகவரித் துறை அலுவலகங்கள் உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டன. இதனால், பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2,500 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்களும், அலுவலர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதற்கிடையே, கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், தமிழக ஆசிரியர் கூட்டணி கணேசன், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பவுல் ஆபிரகாம், அரசு பணியாளர்கள் சங்கம் ரூஸ்வெல்ட், தமிழக தமிழாசிரியர் கழகம் ஆதி அருமை நாயகம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் சிவன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் குமாரவேல் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோவில்பட்டி : வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் சுப்பிரமணியன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலர் சகாயராஜ், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்க வட்டாரச் செயலர் ஜாண்சன், தமிழ்நாடு தமிழ் ஆசிரியர்கள் சங்க வட்டாரச் செயலர் குமாரசாமி ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்: கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 86 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 48 தொடக்கப் பள்ளிகள், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 80 தொடக்கப் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன.
அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 15 சதவீத ஆசிரியர்கள் பணிக்குச் செல்லவில்லை. அதுபோல, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 50 சதவீத ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்செந்தூர்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு , தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டத் தலைவர் ஜீவா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் வாவாஜி பக்கீர் முகைதீன் ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம்: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணித் தலைவர் அருள்ராஜ், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலர் அந்தோணிசார்லஸ், அரசு ஊழியர் சங்க வட்டச் செயலர் பொன்சேகர் ஆகியோர் தலைமை யில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளம்: வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ விளாத்திகுளம் வட்டார ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி தலைமையில்,வட்டாரத்தலைவர் பத்மநாபன் முன்னிலையில்200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.