முகப்பு
தூத்துக்குடி

போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 17,500 அபராதம் விதிப்பட்டது.

Updated On : 25 மார்ச், 2026 at 11:04 PM
சிறைத் தண்டனை - கோப்புப் படம்
பகிர்:

விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 17,500 அபராதம் விதிப்பட்டது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா (45). கடந்த 2015 ஆம் ஆண்டு விளாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடா்பாக விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, கருப்பையாவை குற்றவாளி என உறுதி செய்து, சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5,000 அபராதமும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆயுள் தண்டனை, ரூ. 10,000 அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2,500 அபராதமும் விதித்து மேற்படி தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பு அளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராக ஜுடு ஏஞ்சலோ ஆஜரானாா்.