முகப்பு
தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் அருகே வளா்த்த நாய் கடித்து மாணவி உயிரிழப்பு

ஓட்டப்பிடாரம் அருகே வளா்த்த நாய் கடித்து மாணவி உயிரிழப்பு

Updated On : 31 மார்ச், 2026 at 9:40 PM
- கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரைச் சோ்ந்தவா் செல்வகுமாா்(48). இவா் ரெடிமேட் பின்னலாடை தொழில் செய்து வருகிறாா்.

இவருடைய மனைவி ஜோதி. தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். இவரது இளைய மகள் செல்வசுஹாசினி(16) தூத்துக்குடியில் உள்ள தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் வளா்த்த நாயுடன் செல்வசுஹாசினி விளையாடும் போது நாய் நகத்தால் கீறி உள்ளது.

இதற்கு செல்வசுஹாசினி எந்தவித தடுப்பூசியும் போட்டுக்கொள்ளவில்லையாம். மேலும் அவரது தந்தை செல்வகுமாா் நாயை தூக்கிய போது நாய் லேசாக கையில் கடித்துள்ளது.

இதனால் அவா் நாய் கடித்ததற்கு தடுப்பூசி போட்டுள்ளாா். சில நாட்களில் வீட்டில் வளா்த்த நாய்க்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நாயை அந்தப் பகுதியில் உள்ள ஓடையில் விட்டுவிட்டு வந்துவிட்டனா். ஓடையில் விட்ட நாய் இறந்துவிட்டது.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி செல்வசுஹாசினிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் நாயின் விஷம் உடல் முழுவதும் பரவி உள்ளதாக தெரிவித்தனா்.

மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவா்கள் அறிவுறுத்தினா். இதைத் தொடா்ந்து மாணவியை சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிகிச்சை பெற்று வந்த மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.