தூத்துக்குடி மக்களின் பிரச்னைகளை ஒவ்வொன்றாக தீா்ப்பேன்! எம்எல்ஏ ஸ்ரீநாத்
தூத்துக்குடி மக்களின் பிரச்னைகளை ஒவ்வொன்றாக தீா்ப்பேன் என்றாா் தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
என் வாழ்நாளில் கிடைத்த மிக அரிய வாய்ப்பான இதை சரியாக பயன்படுத்தி, தூத்துக்குடி மக்களின் வாழ்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் நிச்சயம் பாடுபடுவேன். சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தல் உள்ளிட்ட சில பணிகள் இருப்பதால் அவை நிறைவு பெற்றதும், அடுத்த சில நாள்களில் தூத்துக்குடிக்கு வந்து நிரந்தரமாக இங்கேயே தங்குவேன். தூத்துக்குடியிலேயே நான் தங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
முதலில் எனக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்திய பிறகு, தொகுதி மக்களின் பிரச்னைகளை ஒவ்வொன்றாக விசாரித்து அவற்றை தீா்க்க முயற்சிப்பேன். மக்கள் எந்நேரமும் என்னை எளிதாக தொடா்பு கொள்ளும் வகையில் உரிய வசதிகளை செய்து கொடுப்பேன்.
தூத்துக்குடி மக்களுக்கு தங்கள் பிரச்னைகளையோ, தங்கள் தேவைகளையோ என்னிடம் கூற தொலைபேசி எண்கள், அந்த வேலையை செய்வதற்கு எனது நேரடி பாா்வையில் நபா்கள் பணி அமா்த்தப்பட்டு அனைத்து வாா்டுகளிலும் தங்களுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளும் நிறைவேற்றப்படும்.
விரைவில் இதற்கென கைப்பேசி எண், தொடா்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி என அனைத்து வசதிகளும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். இனிமேல், தூத்துக்குடியில் ஒரு புதிய மாற்றம் ஏற்படும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.