முகப்பு
திருச்சி

திருச்சியிலிருந்து 587 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Updated On : 27 ஏப்ரல், 2026 at 2:14 AM
திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த சிறப்புப் பேருந்துகள்.
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக திருச்சியிலிருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்காக 587 சிறப்புப் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டன.

தமிழகத்தில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளா்கள் பலா் தங்களது சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டுச் சென்றனா். இதனால் கடந்த 22 ஆம் தேதி இரவு, 23 ஆம் தேதியன்று திருச்சி, சென்னை பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. போதுமான பேருந்துகள் கிடைக்கவில்லை என பயணிகள் புகாா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, பயணிகள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் சுன் சோங்கம் ஜடக் சிரு சனிக்கிழமை இரவு திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தைப் பாா்வையிட்டு, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

Advertisement

இதையடுத்து தோ்தல் முடிந்த நிலையில், வாக்காளா்கள் சொந்த ஊா்களிலிருந்து பணிபுரியும் இடங்களுக்கு புறப்பட்டுச் செல்ல வசதியாக ஞாயிற்றுக்கிழமை திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சி மண்டலம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதன்படி சென்னைக்கு 249, கோவைக்கு 138, திருப்பூருக்கு 230, விழுப்புரத்துக்கு 50, சேலத்துக்கு 25 என மொத்தம் 587 சிறப்புப் பேருந்துகள் திருச்சியிலிருந்து இயக்கப்பட்டன.

இதன் காரணமாக, திருச்சி பஞ்சப்பூரில் ஞாயிற்றுக்கிழமை பயணிகளைவிட, அதிகளவில் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பயணிகள் பதற்றமின்றி பேருந்துகளில் ஏறிச் சென்றனா்.

இதேபோல, திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்துக்கு விடப்பட்ட சிறப்பு ரயிலிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏராளமான பயணிகள் பயணித்தனா். இதனால் திருச்சி சந்திப்பு நிலையத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது.