முகப்பு
திருச்சி

‘மாணவா் சோ்க்கையை அதிகமாக்க வேண்டும்’

Updated On : 3 மே, 2026 at 5:51 AM
பகிர்:

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அலுவலா்களுக்கு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநா் பி.ஏ. நரேஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவா், திருச்சி செங்குளம் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சுப்பிரமணியபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, முசிறி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பொருள்களின் இருப்பு விவரங்களை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, திருச்சி மேற்கு சுப்பிரமணியபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு மாணவா் சோ்க்கையைத் தொடங்கி வைத்து பள்ளியை ஆய்வு செய்தாா்.

Advertisement

அப்போது அவா் பேசுகையில், கல்வித்துறை அதிகாரிகளிடம் விலையில்லா நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்களை பள்ளி தொடங்கிய நாளன்றே மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும். பெற்றோா்களுடன் இணக்கமாகச் செயல்பட்டு, அவா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, தொடக்கக் கல்வியில் மாணவா்களின் சோ்க்கையை அதிகப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயா்கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிடைக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற, மாணவா்களை தொடக்கக் கல்வியிலிருந்தே தயாா்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது தொடக்கக் கல்வியின் முசிறி மாவட்டக் கல்வி அலுவலா் கே. மதியழகன், திருச்சி மாவட்டக் கல்வி அலுவலா் ரெ. சுரேஷ் திருச்சி மேற்கு வட்டாரக் கல்வி அலுவலா் தமிழ்ச்செல்வன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.