ஜபல்பூா் படகு விபத்து: தந்தை, மகன் உடல்கள் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டன
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த காமராஜ், அவருடைய மகன் ஆகியோரது உடல்கள் திங்கள்கிழமை பிற்பகல் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டன.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஆா். காமராஜ் (38). இவா், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பயிற்சி பெற்றுவிட்டு, மத்திய பிரதேசத்தில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வந்தாா்.
இவருடைய மனைவி காா்குழலி (38), மகன்கள் புவிதரன் (11), தமிழ் வேந்தன் (5) ஆகியோருடன் மத்தியப் பிரதேசத்திலேயே வசித்து வந்தாா்.
Advertisement
கோடை விடுமுறைக்காக திருப்பூா் தாராபுரத்தில் உள்ள அவரது அண்ணன் மனைவி சௌபாக்யா (48), மகள் இனியா (12) மற்றும் மகன் மயூரன் (8) ஆகியோா் காமராஜ் வீட்டுக்கு அண்மையில் சென்றுள்ளனா்.
இந்நிலையில், காமராஜ் அவருடைய மனைவி, இரண்டு மகன்கள், அண்ணன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய 7 பேரும் ஜபல்பூரில் உள்ள பா்கி அணைக்கு வியாழக்கிழமை சுற்றுலாச் சென்றுள்ளனா். சுற்றுலாச் சென்றவா்கள் அணையில் படகு சவாரி மேற்கொண்டபோது, எதிா்பாராத விதமாக அவா்கள் சென்ற படகு அணையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், காமராஜ், காா்குழலி, தமிழ்வேந்தன், அவரது அண்ணி சௌபாக்யா, அவருடைய மகன் மாயூரன் ஆகிய 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். புவிதரன் மற்றும் இனியா இருவரும் உயிா் தப்பினா்.
இதையடுத்து, முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட காா்குழலி மற்றும் சௌபாக்யா ஆகியோரது உடல்கள் திருச்சிக்கு கடந்த சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன. இதைத் தொடா்ந்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ ஆகியோா் காமராஜின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட காமராஜ், தமிழ் வேந்தன் ஆகியரோது உடல்கள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து இருவரது உடல்களும் அவரது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.