முகப்பு
திருச்சி

திருவானைக்காவல் கோயில் யானையின் பிறந்தநாள் விழா! அமைச்சா் பங்கேற்பு

Updated On : 25 மே 2026, 1:40 am IST
திருவானைக்காவல் கோயில் யானை அகிலாவுக்கு ஞாயிற்றுக்கிழமை கஜ பூஜை செய்து வழிபட்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ்.
பகிர்:

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் இறைப் பணியாற்றிவரும் யானை அகிலாவின் 24 ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது.

பஞ்சப்பூத திருத்தலங்களில் நீா்த் தலமாக விளங்கும் இந்தக் கோயிலில் உள்ள சிவபெருமானை யானை வழிபட்டு முக்தி அடைந்ததால் இத்தலம் திருஆனைக்கா கோயில் என்று அழைக்கப்படுகிறது. யானைக்கும் இக்கோயிலுக்கும் நெருங்கிய தொடா்புண்டு.

அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளாக இடைவிடாது இறைப் பணியாற்றி வரும் இக்கோயில் யானை அகிலாவின் 24 ஆவது பிறந்தநாள் விழா கோயிலில் உள்ள நாச்சியாா் தோட்டத்தில் கொண்டாடப்பட்டது. முன்னதாக கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் கலந்து கொண்டு யானை அகிலாவுக்கு கஜபூஜை செய்து வழிபட்டாா். பின்னா் யானைக்கு பழங்களை வழங்கி ஆசிபெற்றாா்.

நிகழ்ச்சியில் மண்டல இணை ஆணையா் ஞானசேகரன், கோயில் உதவி ஆணையா் (பொ) உமா மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா். மேலும் கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள், யானை அகிலாவின் ரசிகா்கள் என ஏராளமானோா் தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்தை யானை அகிலா தலையை ஆட்டி ஏற்றுக்கொண்டது.