போதை மாத்திரைகள் விற்பனை செய்த இரு இளைஞா்கள் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ஆலம் வீதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள், பாலக்கரை மேலகிருஷ்ணன் கோயில் வீதியைச் சோ்ந்த பி. ஆரோக்கிய செல்வக்குமாா் (24), கீழப்புதூரைச் சோ்ந்த கே. தனுஷ் (24) என்பதும், இருவரும் போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் திரவ போதை மருந்து ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.