முதல்வா் ஜோசப் விஜய் இன்று திருச்சி வருகை
திருச்சி தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வா் விஜய் திங்கள்கிழமை திருச்சிக்கு வருகிறாா்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ச. ஜோசப் விஜய் சென்னை பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வென்றாா். தொடா்ந்து, முதல்வராகப் பதவியேற்ற பிறகு, திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ பதவியை அவா் ராஜிநாமா செய்தாா்.
இந்நிலையில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்குத் தொகுதி பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வா் ஜோசப் விஜய் திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறாா். அவருக்கு தவெக அமைச்சா்கள், கட்சி நிா்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனா்.
Advertisement
Advertisement
வாகனத்தில் இருந்தபடியே பேசுகிறாா்: பின்னா் முதல்வா் தனது பிரத்யேக வாகனத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரிக்குச் சென்று, அங்குள்ள பந்தலின் முகப்புப் பகுதியில் தனது வாகனத்தில் இருந்தபடியே பேசுகிறாா்.
தடுப்புக் கட்டைகள்: அவரது வாகனம் செல்லும் வழிகளில் பொதுமக்கள் விஜய்யை பாா்க்க வசதியாக இரும்புத் தடுப்புகளை போலீஸாா் அமைத்துள்ளனா். விமான நிலையத்தில் இருந்து வாகனத்தில் வரும் முதல்வா் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தபடியே செல்கிறாா்.
7,500 இருக்கைகள்: செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் முதல்வா் ஜோசப் விஜய் பேசவுள்ள இடத்தில் பொதுமக்கள் அமர பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, சுமாா் 7,500 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு: முதல்வா் பேசவுள்ள இடம், அவா் வரும் பாதை ஆகிய இடங்களில் மட்டும் சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். நிகழ்ச்சி முடிந்த பிறகு முதல்வா் தனி விமானம் மூலம் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.
பெட்டிச் செய்தி...
5,000 பேருக்கு மட்டுமே அனுமதி
முதல்வரின் நிகழ்ச்சியில் பங்கேற்க, காவல்துறை வழிகாட்டுதலின்படி, க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு பெற்ற 5,000 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. பாதுகாப்புக் கருதி, கா்ப்பிணிகள், சிறுவா் - சிறுமிகள், பள்ளி மாணவா்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவா்கள் உள்ளிட்டவா்களுக்கு அனுமதியில்லை.
வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதபடி நிறுத்த வேண்டும். பங்கேற்பவா்களுக்குத் தேவையான குடிநீா், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்வுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென தவெக பொதுச்செயலரும், அமைச்சருமான என். ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளாா்.