உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார்
அரியலூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ள 18 வயது முதல் 65 வயதுக்குள்பட்ட உழவர்களில் புற்றுநோய், காசநோய், எச்.ஐ.வி ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 1000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அரியலூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்ட உழவர்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் 23 பேருக்கும், காசநோயால் பாதிக்கப்பட்ட 28 பேருக்கும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட 110 பேருக்கும் என மொத்தம் 161 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
தற்போது உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, அடையாள அட்டை பெற்றுள்ள 18 வயது முதல் 65 வயதுக்குள்பட்ட உழவர்களில் சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி மாற்று சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்த கொண்டவர்கள், சிகிச்சை மேற்கொண்ட நாளில் இருந்து, முதல் 1 ஆண்டுக்கும், டயாலிஸிஸ் செய்து வருவோருக்கு 6 மாதங்களுக்கும் மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், இந்த உதவித்தொகை தகுதி அடிப்படையில் நீடித்து வழங்கப்படும். எனவே, நோயாளிகள் தாங்கள் சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்த அல்லது டயாலிஸிஸ் சிகிச்சை செய்து வருவது குறித்த மருத்துவக் குறிப்புகள், உழவர் பாதுகாப்புத் திட்ட அட்டையின் நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை இணைத்து சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரமேஷை 9443561317 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.