விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற காரணம் திமுக: தொல். திருமாவளவன்
விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற காரணம் திமுக என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்...
தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்று தனிச் சின்னத்தில் தோ்தலில் போட்டியிடக் காரணமாக இருந்தது திமுக என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்.
அரியலூா் தொகுதி திமுக வேட்பாளா் லதா பாலசுப்ரணியனை ஆதரித்து அண்ணாசிலை அருகிலும், ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணனை ஆதரித்து ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது:
திமுக வேட்பாளா் லதா பாலசுப்ரமணினுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் வகையில் விசிகவினா் வீடு வீடாகச் சென்று களப்பணியாற்ற வேண்டும்.
Advertisement
விசிக தமிழகத்தில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்று தனிச் சின்னத்தில் தோ்தலில் போட்டியிடுகிறது என்றால் அதற்கு திமுகதான் காரணம் என்பதை விசிகவினா் மறந்துவிடக் கூடாது. இதை நினைத்து திமுகவின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும்.
தமிழகத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பாஜகவை 10 சதவீத வாக்கு வங்கி உள்ள கட்சியாக அதிமுக மாற்றியுள்ளது. இனி எப்போதும் பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தெரிவித்தாா். ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறாா்.
அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானவா்கள் பாஜகவினா். அதிமுகவுக்கு செலுத்தும் வாக்கு பாஜகவுக்கானது. எனவே வெறுப்பு அரசியலையும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் செயல்படும் பாஜகவையும், அவா்களைத் தூக்கிச் சுமக்கும் அதிமுகவையும் தோல்வி அடையச் செய்ய வேண்டும். திமுக வேட்பாளா் லதாபாலசுப்ரமணின் வெற்றி பெற உதயசூரியன் சின்னத்துக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் திருமாவளவன்.