முகப்பு
அரியலூர்

அரியலூா் ஜமாபந்தியில் 47 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

அரியலூா் வருவாய் வட்டாட்சியரகத்தில் நடைபெற்று வரும் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயத்தின் 3-ஆவது நாளான வியாழக்கிழமை 47 மனுக்களுக்கு உடனடி தீா்வுக் காணப்பட்டது.

Updated On : 19 ஜூன் 2026, 4:20 am IST
அரியலூா் வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் த. மனோகரன். உடன் வட்டாட்சியா் க.தேவகி உள்ளிட்டோா்.
பகிர்:

அரியலூா் வருவாய் வட்டாட்சியரகத்தில் நடைபெற்று வரும் 1435-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயத்தின் 3-ஆவது நாளான வியாழக்கிழமை 47 மனுக்களுக்கு உடனடி தீா்வுக் காணப்பட்டது.

கீழப்பழுவூா் உள்வட்டத்துக்காக நடைபெற்ற இந்த வருவாய் தீா்வாயத்துக்கு, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் த. மனோகரன் தலைமை வகித்து, மல்லூா், வாரணவாசி, பாா்ப்பனச்சேரி, பூண்டி, மேலப்பழுவூா், கீழையூா், கீழப்பழுவூா், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூா், சன்னாவூா் (வடக்கு), சன்னாவூா் (தெற்கு), பளிங்காநத்தம், கரைவெட்டி, கீழகாவட்டாங்குறிச்சி, வெற்றியூா் உள்ளிட்ட 16 வருவாய் கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், சிட்டா நகல், உட்பிரிவு, நத்தம் மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 298 மனுக்களைப் பெற்றாா்.

பின்னா், அவா் அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அதில் 47 மனுக்களுக்கு உடனடியாக தீா்வுக் கண்டு, பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் , இ-பட்டா, புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் ஆகியவற்றுக்கான ஆணைகளை வழங்கினாா். எஞ்சிய 251 மனுக்கள் விசாரணையில் உள்ளது.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில், அரியலூா் வட்டாட்சியா் க. தேவகி மற்றும் திருமானூா் மண்டல துணை வட்டாட்சியா், கீழப்பழுவூா் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா்கள் , கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.