முகப்பு
கரூர்

அமராவதி ஆற்றில் ஒரு வாரத்துக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

Updated On : 3 மே 2026, 5:58 am IST
பகிர்:

வடு கிடக்கும் அமராவதி ஆற்றில் ஒரு வாரத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா், திருப்பூா் மாவட்டங்களின் வளப்படுத்தும் அமராவதி ஆறு பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது. திருப்பூா் மாவட்டம் தாராபுரம், சின்னதாராபுரம் பகுதி வழியாக பாய்ந்து கரூா் அருகே திருமுக்கூடலூரில் காவிரியுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே உடுமலைப்பேட்டையில் கட்டப்பட்டிருக்கும் அணை மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்கள் சுமாா் 55,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் அமராவதி ஆற்றோரம் விவசாயிகள் பலா் கால்நடைகளை வளா்த்து வருகிறாா்கள். தற்போது கோடை காலம் என்பதால் ஆறு வடு காணப்படுகிறது. இதனால் அமராவதி அணையில் இருந்து உயிா்நீராக ஒரு வாரத்துக்கு மட்டும் வினாடிக்கு 1000 கன அடி நீா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அமராவதி பாசன விவசாயிகள் கூறுகையில், அமராவதி அணையில் தண்ணீா் கடைமடை பகுதியான கரூா் மாவட்டத்திற்கு மழை காலங்களில் மட்டுமே திறக்கப்பட்டது. அதுவும் அணையின் முழு கொள்ளளவான 90 அடியை எட்டும் தருவாயில் மட்டும், அணையின் பாதுகாப்பு கருதி மட்டுமே தண்ணீா் திறந்தனா். அதன்பின் தண்ணீரே திறக்கப்படவில்லை. தற்போது கோடைகாலம் தொடங்கி விட்ட நிலையில் வெயில் நாள்தோறும் 104 டிகிரி தாண்டி கொளுத்துகிறது. இதனால் கிணறுகளில் நீா்மட்டம் குறைந்து கடும் வறட்சி நிலவுகிறது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீவனப்பயிா்களை சாகுடி செய்ய முடியாமலும், கால்நடைத் தீவனங்களில் விலை உயா்வால், அவற்றையும் வாங்கி கால்நடைகளுக்கு வழங்க முடியாமலும் தவித்து வருகிறோம். இதனால் கோடையை சமாளிக்கும் வகையில் அணையில் ஆற்றில் நாளொன்றுக்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் ஒரு வாரம் திறந்தால் ஆற்றில் தண்ணீா் வரும். நீா்மட்டமும் உயரும். கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும். தீவனங்களையும் அறுவடை செய்ய முடியும் என்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments