விசுவக்குடி நீர்த்தேக்கப் பகுதியில் ரூ.2 கோடியில் சிறுவர் பூங்கா
பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடி நீர்த்தேக்கம் அருகே ரூ.2 கோடியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடி நீர்த்தேக்கம் அருகே ரூ.2 கோடியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடியில் கல்லாறு ஓடையின் குறுக்கே செம்மலை - பச்சமலை இடையே மலைப் பகுதியில் பெய்யும் நீரை வீணாகாமல் தடுத்து, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் ரூ. 19 கோடியில் 665 மீட்டர் நீளத்தில் கரையுடன் அணை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், 2017, ஆகஸ்ட் 5 ஆம் தேதி பெரம்பலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜையை சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரம்பலூர் இரா.தமிழ்ச்செல்வன், குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன் தொடக்கி வைத்தனர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரபாகரன், சுற்றுலாத்துறை உதவி அலுவலர் வரதராஜன் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.