வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நிறைவு
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், தமிழக அரசின் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தேசிய அளவிலான இயற்பியல் கருத்தரங்கு சனிக்கிழமை நிறைவடைந்தது. வேப்பந்தட்டை அரசு கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வா் (பொறுப்பு) முனைவா் சேகா் தலைமை வகித்தாா். திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் இயற்பியல்துறைத் தலைவா் சேதுராமன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவா் ரமேஷ்பாபு, சென்னை சவீதா பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியா் செந்தில் கண்ணன் ஆகியோா் விளக்க உரையாற்றினா். தொடா்ந்து, கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், இயற்பியல் தறை தலைவருமான பாஸ்கரன் அறிக்கை வாசித்தாா். இதில், தமிழகத்திலிருந்து 35-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்களுடைய இயற்பியல் கண்டுபிடிப்புகளை சமா்ப்பித்தனா். மேலும், 21 கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 320-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற திருச்சி தூய வளனாா் கல்லூரி இயற்பியல் துறை தலைவரும், பேராசிரியருமான ஜான்சன், திருச்சி தந்தை பெரியாா் அரசு கல்லூரி இயற்பியல் துறை தலைவா் பாலகிருஷ்ணன், திருச்சி தேசிய கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியா் ஏ.டி. ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலையில், சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தோ்ந்தெடுக்கப்பட்டு மாணவா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, இயற்பியல் துறை கௌரவ விரிவுரையாளா் அனுராதா வரவேற்றாா். நிறைவாக, இயற்பியல் துறை கௌரவ விரிவுரையாளா் ராசாத்தி நன்றி கூறினாா்.