அறந்தாங்கி அருகே போராட்ட அறிவிப்பையடுத்து தூர்வாரப்பட்ட வரத்து வாய்க்கால்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை கால்வாய்க்குள்பட்ட கூகனூர் ஏரியில் தூர்வாரும் பணியை முழுமையாக
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை கால்வாய்க்குள்பட்ட கூகனூர் ஏரியில் தூர்வாரும் பணியை முழுமையாக நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை முழமையாக தூர்வாரப்பட்டது.
அறந்தாங்கி அருகே கூகனூர் ஏரி, நாட்டாவட்டி ஏரி, சிறு, சிறு குளங்கள், கல்லணைக் கால்வாய் வாய்க்கால் செல்லும் வரத்து வாரியில் உள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த வாய்க்கால் வழியாகச் செல்லும் நீர் மேற்கண்ட ஏரிகளில் நிரம்பினால், இப்பகுதியில் உள்ள 350 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
இந்த வரத்து வாரிகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாதது, பிரதான வாய்க்காலில் நீர் திறக்கப்பட்டாதது போன்ற காரணங்களால் கூகனூர் ஏரிக்கு செல்லும் வரத்து வாரியை தூர்வாரி புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏரிக்கு செல்லும் வரத்து வாரியை 1.70 கி.மீட்டர் தொலைவுக்கு தூர்வார பொதுப்பணித்துறை ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணிகளை தொடங்கியது.50 சதவீத பணிகள் கூட நிறைவடையாத நிலையில், தூர்வாரிய மண், செடி, கொடிகள் வாய்க்காலில் போடப்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களைக் தொடர்பு கொண்டு விவசாயிகள் கேட்டபோது, தூர்வாரும் பணிகள் முடிந்து விட்டதாக கூறியுள்ளனர். பொதுப்பணித் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து திங்கள்கிழமை (ஜூலை 23) வாய்க்காலில் இறங்கி போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்தனர். இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் எஞ்சிய பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். போராட்ட அறிவிப்பு வெளியிட்ட பிறகு பணி செய்ய வந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், தூர்வாரும் பணியை முழுமையாக செய்யாவிட்டால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்தனர். இதையடுத்து தூர்வாரும் பணி முழுமையாக முடிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கல்லணைக் கால்வாய் பாசனதாரர் கூட்டமைப்பின் துணைச் செயலாளர் ஆ.ராஜேந்திரன் கூறுகையில், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத ஏரிகளை போர்க்கால அடிப்படையில் தூர்வார அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவுக்குக் கூட பணிகளை செய்யமால் இருப்பது வேதனை அளிக்கிறது. காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதைத் தடுக்க கடைமடை பாசனப் பகுதி வாய்க்கால், ஏரிகளை முழுமையாகத் தூர்வாரி தண்ணீரைத் தேக்கினால் விவசாயம் செழிப்படையும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.