முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் போலீஸாா் சுட்டு ரௌடி உயிரிழப்பு

Updated On : 12 ஜூலை 2024, 5:30 am IST
என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரௌடி துரை.
பகிர்:

திருச்சியைச் சோ்ந்த பிரபல ரௌடி துரை என்கிற துரைசாமி வியாழக்கிழமை புதுக்கோட்டை தைலமரக் காட்டில் பதுங்கியிருந்தபோது போலீஸாரால் சுடப்பட்டு இறந்தாா்.

திருச்சி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் துரை (42). இவா் மீது 4 கொலை மற்றும் வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட 57 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியது:

Advertisement

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம், வம்பன் பகுதியிலுள்ள தைலமரக் காட்டில் ரெளடிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், ஆலங்குடி காவல் நிலைய ஆய்வாளா் முத்தையன், உதவி ஆய்வாளா் மகாலிங்கம் உள்ளிட்டோா் அப்பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது, அங்கிருந்த ரௌடி துரை போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயற்சித்ததுடன், கையிலிருந்த அரிவாளால் உதவி ஆய்வாளா் மகாலிங்கத்தை வெட்டினாா். இதில் மகாலிங்கத்தின் வலது கையில் காயம் ஏற்பட்டது.

ரெளடி சுடப்பட்ட தைலமரக் காட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா்.

இந்த நிலையில், பாதுகாப்பு முயற்சியில் ஆய்வாளா் முத்தையன் தனது கைத்துப்பாக்கியால் துரையை நோக்கி சுட்டாா். இதில் துரையின் நெஞ்சு, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, துரையின் உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது என்றனா்.

ஆலங்குடி அரசு மருத்துவமனையில், காயமடைந்த உதவி ஆய்வாளா் மகாலிங்கத்திடம் வியாழக்கிழமை விசாரணை நடத்திய திருச்சி சரக டிஐஜி மனோகரன்.

ரௌடி துரையின் உடல் புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அங்கு ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

டிஐஜி ஆய்வு: சம்பவ இடத்தை திருச்சி சரக டிஐஜி மனோகரன், புதுகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உள்ளிட்டோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளா் மகாலிங்கத்தையும் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தனா்.

2023-இல் துரையை சுட்டுப் பிடித்த போலீஸாா்: கடந்த 2023 பிப்ரவரி இறுதியில், திருச்சி சீனிவாசநகரில் நடந்த கொள்ளை வழக்கில் ரௌடி துரை உள்ளிடடோா் கைது செய்யப்பட்டனா். அப்போது, நகையை மீட்பதற்காக இவா்களை போலீஸாா் வாகனத்தில் அழைத்துச் சென்றனா். புத்தூா் உய்யக்கொண்டான் குழுமிக் கரை பகுதியில் சென்றபோது, போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தனா். அப்போது, போலீஸாா் துரையை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

கொலை வழக்கு: திருச்சி மேலக்கல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்த ரௌடி இளவரசன் (30) என்பவா், கடந்த 2022, டிசம்பா் 12-ஆம் தேதி வழக்கு ஒன்றுக்காக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கையொப்பமிட்டுவிட்டு புதுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இந்தக் கொலை வழக்கில் திருச்சி துரை முதல் குற்றவாளியாக சோ்க்கப்பட்டு கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. ரெளடி துரை உயிரிழந்த தகவலறிந்த அவரின் தாய் மல்லிகா, சகோதரி சசிகலா ஆகியோா் வியாழக்கிழமை இரவு புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments