செவிலியா் மாணவி உயிரிழப்பு: சிறப்புக் குழு விசாரணை நிறைவு
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் மாணவி உயிரிழந்தது தொடா்பாக சிறப்புக் குழுவின் விசாரணை திங்கள்கிழமை நிறைவு பெற்றது.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூக்கடைப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியா் மாணவி சீதாலட்சுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக புகாா் எழுந்தது.
இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளா் பாஸ்கா் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் கடந்த 2 நாள்களாக விசாரணை நடத்தினா். 25-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி அவா்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
மேலும், சிகிச்சை அளித்த மருத்துவா்கள், உடனிருந்தோா், செவிலியா்கள், சீதாலட்சுமியின் உடன் பயின்ற மாணவிகள், தங்கியிருந்த அறையில் இருந்தோா், குடும்பத்தினா் என பலதரப்பிலும் சிறப்புக் குழு விசாரணை நடத்தியது. திங்கள்கிழமையுடன் விசாரணை முடிந்தது. இதையடுத்து குழுவினா் விரிவான அறிக்கை தயாரித்து அரசுக்கு வழங்கவுள்ளனா். இந்த அறிக்கையின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.